திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.20 திருப்பூவணம் - ஈரடிமேல் வைப்பு பண் - காந்தாரபஞ்சமம் |
மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரணம் மூன்றெய்த
நாதனை யடிதொழ நன்மை யாகுமே.
|
1 |
வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில்திருப் பூவ ணத்துறை
ஆனநல் லருமறை யங்கம் ஓதிய
ஞானனை யடிதொழ நன்மை யாகுமே.
|
2 |
வெந்துய ருறபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை யடிதொழ நன்மை யாகுமே.
|
3 |
வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே.
|
4 |
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த
பெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.
|
5 |
வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமலர் அடிதொழ நன்மை யாகுமே.
|
6 |
பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.
|
7 |
வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க் கில்லை பாவமே.
|
8 |
நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.
|
9 |
மண்டைகொண் டுரிதரு மதியில் தேரருங்
குண்டருங் குணமல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங்
கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே.
|
10 |
புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |